பிறவியும் ஞானமும்
உயிர்கள் தத்தம் ஊழ்வினைப் பயனால் எண்ணற்ற ஆண்டுகள், பல பலப் பிறவிகளில்(1) உழன்று, பின் தன் நன்முயற்சியால் அவ்வினைகளை உதிர்த்து வீடு பேறு அடைகின்றன. அவ்வுயிர்கள் தன் வினைக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, வரம்பற்ற ஞானத்தில் திளைக்க, வழிக்காண முயன்றவர்கள் தான் தீர்த்தங்கரர்கள். "தீர்த்தங்கரர்" என்றால் கடலைக் கடக்க உதவுபவர்கள் என்று பொருள். அஃதாவது, பிறவி என்னும் கடலைக் கடக்க தெப்பமாக(2) /புணையாகவிருந்து உதவுபவர்கள். இவர்களையே சமணர்கள் தங்கள் கடவுளாகக் போற்றி வணங்கி வருகிறார்கள். இவர்களே தொழத்தக்கவர்கள் ஆவர்.
குணஸ்தானப் படிகள்
வீடுபேறு என்பது நாம் விரும்பிய உடனே கிடைக்கக்கூடியதல்ல. உயிர் வீடுபேறு அடைய வேண்டுமானால் தன் வினைக்கட்டுகளிலிருந்து விடுபடவேண்டும். அப்படிவிடுபட்ட உயிரே வீடு நிலை எய்தி வரம்பற்ற ஞானத்தில்(3) திளைக்க முடியும் என்பது சமணரின் கோட்பாடாகும்.
உயிர்கள் எண்ணற்ற பிறவிகளில் உழன்று, தன் முயற்சியில் தாழாது, படிப்படியாக தான், அந்த வரம்பற்ற முழுதுணர் ஞானத்தை பெற முடியுமேயன்றி, வேறு "சக்தி"(4)யுடைய உந்துதலாலேயோ, துணையாலேயோ வீடுபேறு அடைய முடியாது.
உயிர்கள் மும்மணிகளான, "நற்காட்சி", "நல்ஞானம்","நல்லொழுக்கம்", என்னும் மூன்று மணிகளைப் பற்றி படிப்படியாகத் தான் வீடுபேறு அடைய முடியும். உயிர் படிப்படியாக முன்னேறுவதை, சமணத்தில் "குணஸ்தானம்" என்பார்கள்.
ஞானம் அல்லது அறிவு
சமண கொள்கைப்படி ஞானம் (அறிவு) ஐந்து வகைப்படும்.
1. மதி ஞானம் - இயற்கையான அறிவு அல்லது ஐம்பொறியினால் அறியும் அறிவு.
2. சுருத ஞானம் - ஆகம அறிவு அல்லது நூற்களால் ஏற்படும் அறிவு.
3. அவதி ஞானம் - முற்பிறவிகளை அறியும் அறிவு.
4. மனப்பர்யாய ஞானம் - பிறர் மனதில் உள்ளதை அறியும் அறிவு.
5. கேவல ஞானம் - முழுதுணர் ஞானம் அல்லது மூன்று உலகங்களையும், மூன்றுக் காலங்களையும் ஒருங்கே அறியும் அறிவு.
குணஸ்தானத்தில் கடைசி நிலை "தீர்த்தங்கர" நிலை. இக்கடைசி நிலையடைந்த உயிரே கேவல ஞானம் பெற்று திகழ முடியும். இந்த கேவல ஞானத்தை அடைந்தவர்களையே "தீர்த்தங்கரர்கள்" என்று போற்றப் படுகிறார்கள். இவர்களே சமணர்கள் வழிப்படும் கடவுளர்களாம். ஈங்கு ஒன்றை நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். எந்த உயிரும், முயன்றால், "தீர்த்தங்கரர்" நிலை எய்த முடியும். அஃதாவது "கடவுளாகவே" ஆக முடியும். ”முடியும்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும், பிறவி என்னும் கடலைக் கடக்க, பிறவிகள் கோடானகோடி பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஈண்டு நினைவில் வைத்தல்வேண்டும். இந்த இடத்தில்தான் சமணம் மற்ற சமயங்களில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. ஏனைய சமயங்கள் உயிர்கள் கடவுளை அடைவதைத்தான் வீடுபேறு என்று சாற்றுகின்றன.
கேவல ஞானம்
பிராகிருத (பாகதம்) பெயரான "கேவல ஞானம்" என்பதற்கு தமிழில் "கடையிலா அறிவு","அறிவுவரம்பற்ற", "முழுதுணர் ஞானம்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", அலகிலா அறிவு", "முற்றறிவு", ”தூய அறிவு” என்று பொருள்.
இக்கேவல ஞானத்தையே திருக்குறள் ஆசிரியர் தேவர், "வாலறிவன்" என்று போற்றி புகழ்கிறார். அந்த குறள் இதுதான்.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்" - திருக்குறள்
வாலறிவன் = வால்+அறிவன். "வால்"(5) என்பதற்கு "Greatness, Abandance,Purity, Last" என்று ஆங்கிலத்தில் பொருள் வரும். வாலறிவு என்பதற்கு "முழுதுணர்ந்த அறிவு" என்றும் "முற்றும் உணர்ந்த அறிவு" என்றும் "கடையிலா அறிவு" என்றும் தூய அறிவு என்றும் பொருள் படும். அவ்வாறே, வாலறிவன் என்பதற்கு கடையிலா ஞானத்தை உடையவன் எனவும், முழுதுணர்ந்த அறிவன் எனவும், அறிவுவரம்பு உடையவன் எனவும் பொருள் படும். வாலறிவு என்பதற்கு "மெய்யுணர்வு" என்று ஈங்கு பொருள் கொள்வது பொருந்தாது!
சமண இலக்கியத்தி வாலறிவு
வாலறிவு என்ற சொற்றொடரை எடுத்தாளும் சமண இலக்கியங்களையும் இங்கு பார்ப்போம்!
1. கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்
2. இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை
3. அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்
4. உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி
5. பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)
இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் கொடுக்கமுடியும் விரிவஞ்சி இங்குக் கொடுக்கப்படவில்லை!
அறம் மறவற்க!
அறமல்லது துணையில்லை!!
இரா.பானுகுமார்,
சென்னை.
குறிப்புகள்:
1. "தொல்லை நம்பிறவி எண்ணின்
தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய" - சீவக சிந்தாமணி
2. "ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்" - சீவக சிந்தாமணி
3. "அறிவன், அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்" - சிலப்பதிகாரம்
4. "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூகி தரும்" - திருக்குறள்
5. தமிழ் அகராதி