Wednesday, January 24, 2007

வாலறிவன்



பிறவியும் ஞானமும்



உயிர்கள் தத்தம் ஊழ்வினைப் பயனால் எண்ணற்ற ஆண்டுகள், பல பலப் பிறவிகளில்(1) உழன்று, பின் தன் நன்முயற்சியால் அவ்வினைகளை உதிர்த்து வீடு பேறு அடைகின்றன. அவ்வுயிர்கள் தன் வினைக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, வரம்பற்ற ஞானத்தில் திளைக்க, வழிக்காண முயன்றவர்கள் தான் தீர்த்தங்கரர்கள். "தீர்த்தங்கரர்" என்றால் கடலைக் கடக்க உதவுபவர்கள் என்று பொருள். அஃதாவது, பிறவி என்னும் கடலைக் கடக்க தெப்பமாக(2) /புணையாகவிருந்து உதவுபவர்கள். இவர்களையே சமணர்கள் தங்கள் கடவுளாகக் போற்றி வணங்கி வருகிறார்கள். இவர்களே தொழத்தக்கவர்கள் ஆவர்.


குணஸ்தானப் படிகள்

வீடுபேறு என்பது நாம் விரும்பிய உடனே கிடைக்கக்கூடியதல்ல. உயிர் வீடுபேறு அடைய வேண்டுமானால் தன் வினைக்கட்டுகளிலிருந்து விடுபடவேண்டும். அப்படிவிடுபட்ட உயிரே வீடு நிலை எய்தி வரம்பற்ற ஞானத்தில்(3) திளைக்க முடியும் என்பது சமணரின் கோட்பாடாகும்.

உயிர்கள் எண்ணற்ற பிறவிகளில் உழன்று, தன் முயற்சியில் தாழாது, படிப்படியாக தான், அந்த வரம்பற்ற முழுதுணர் ஞானத்தை பெற முடியுமேயன்றி, வேறு "சக்தி"(4)யுடைய உந்துதலாலேயோ, துணையாலேயோ வீடுபேறு அடைய முடியாது.

உயிர்கள் மும்மணிகளான, "நற்காட்சி", "நல்ஞானம்","நல்லொழுக்கம்", என்னும் மூன்று மணிகளைப் பற்றி படிப்படியாகத் தான் வீடுபேறு அடைய முடியும். உயிர் படிப்படியாக முன்னேறுவதை, சமணத்தில் "குணஸ்தானம்" என்பார்கள்.

ஞானம் அல்லது அறிவு

சமண கொள்கைப்படி ஞானம் (அறிவு) ஐந்து வகைப்படும்.

1. மதி ஞானம் - இயற்கையான அறிவு அல்லது ஐம்பொறியினால் அறியும் அறிவு.

2. சுருத ஞானம் - ஆகம அறிவு அல்லது நூற்களால் ஏற்படும் அறிவு.

3. அவதி ஞானம் - முற்பிறவிகளை அறியும் அறிவு.

4. மனப்பர்யாய ஞானம் - பிறர் மனதில் உள்ளதை அறியும் அறிவு.

5. கேவல ஞானம் - முழுதுணர் ஞானம் அல்லது மூன்று உலகங்களையும், மூன்றுக் காலங்களையும் ஒருங்கே அறியும் அறிவு.


குணஸ்தானத்தில் கடைசி நிலை "தீர்த்தங்கர" நிலை. இக்கடைசி நிலையடைந்த உயிரே கேவல ஞானம் பெற்று திகழ முடியும். இந்த கேவல ஞானத்தை அடைந்தவர்களையே "தீர்த்தங்கரர்கள்" என்று போற்றப் படுகிறார்கள். இவர்களே சமணர்கள் வழிப்படும் கடவுளர்களாம். ஈங்கு ஒன்றை நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். எந்த உயிரும், முயன்றால், "தீர்த்தங்கரர்" நிலை எய்த முடியும். அஃதாவது "கடவுளாகவே" ஆக முடியும். ”முடியும்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும், பிறவி என்னும் கடலைக் கடக்க, பிறவிகள் கோடானகோடி பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஈண்டு நினைவில் வைத்தல்வேண்டும். இந்த இடத்தில்தான் சமணம் மற்ற சமயங்களில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. ஏனைய சமயங்கள் உயிர்கள் கடவுளை அடைவதைத்தான் வீடுபேறு என்று சாற்றுகின்றன.



கேவல ஞானம்

பிராகிருத (பாகதம்) பெயரான "கேவல ஞானம்" என்பதற்கு தமிழில் "கடையிலா அறிவு","அறிவுவரம்பற்ற", "முழுதுணர் ஞானம்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", அலகிலா அறிவு", "முற்றறிவு", ”தூய அறிவு” என்று பொருள்.

இக்கேவல ஞானத்தையே திருக்குறள் ஆசிரியர் தேவர், "வாலறிவன்" என்று போற்றி புகழ்கிறார். அந்த குறள் இதுதான்.


"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்" - திருக்குறள்



வாலறிவன் = வால்+அறிவன். "வால்"(5) என்பதற்கு "Greatness, Abandance,Purity, Last" என்று ஆங்கிலத்தில் பொருள் வரும். வாலறிவு என்பதற்கு "முழுதுணர்ந்த அறிவு" என்றும் "முற்றும் உணர்ந்த அறிவு" என்றும் "கடையிலா அறிவு" என்றும் தூய அறிவு என்றும் பொருள் படும். அவ்வாறே, வாலறிவன் என்பதற்கு கடையிலா ஞானத்தை உடையவன் எனவும், முழுதுணர்ந்த அறிவன் எனவும், அறிவுவரம்பு உடையவன் எனவும் பொருள் படும். வாலறிவு என்பதற்கு "மெய்யுணர்வு" என்று ஈங்கு பொருள் கொள்வது பொருந்தாது!



சமண இலக்கியத்தி வாலறிவு








வாலறிவு என்ற சொற்றொடரை எடுத்தாளும் சமண இலக்கியங்களையும் இங்கு பார்ப்போம்!



1. கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்

2. இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை

3. அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்

4. உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி

5. பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)

இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் கொடுக்கமுடியும் விரிவஞ்சி இங்குக் கொடுக்கப்படவில்லை!


அறம் மறவற்க!
அறமல்லது துணையில்லை!!


இரா.பானுகுமார்,
சென்னை.



குறிப்புகள்:

1. "தொல்லை நம்பிறவி எண்ணின்
தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய" - சீவக சிந்தாமணி

2. "ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்" - சீவக சிந்தாமணி

3. "அறிவன், அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்" - சிலப்பதிகாரம்

4. "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூகி தரும்" - திருக்குறள்

5. தமிழ் அகராதி

Monday, January 22, 2007

நீலகேசியின் நையாண்டி!


நீலகேசியின் நையாண்டி!



"நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு "சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் "குண்டலகேசி" என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக எழுந்த சமண நூல். இதன் காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இதன் எழுத்தமைதிக் கருதி இதனை கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.

கதை சுருக்கம்:

"நீலகேசி" என்பவள் திருவளங்காடு பக்கத்தில் இருக்கும் பழையனூர் என்னும் ஊரில்வசித்து வந்த பேய். அப்பேய், சமண முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரிடம், சமண ஆகமங்களைக் கற்று, "திருவறம்" என்று அழைக்கப்படும் சமண அறத்தை நிலை நாட்ட உறுதிப் பூணுகிறாள். அவ்வாறே, மற்ற சமயத்தாரிடம் முன் சென்று அவர்களிடம் வாதுசெய்து, சமண அறத்தை நிலை நாட்டுகிறாள். இதுதான் "நீலகேசி"யின் கதைச் சுருக்கம்.

இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமானஒன்று. அது யாதெனின், நீலகேசி மற்ற சமயங்களிடம் வாது செய்தாள் என்று பார்த்தோம். அந்த சமயங்களாவன,

1.பெளத்தம்,
2.ஆசிவகம்,
3.சாங்கியம்,
4.வைசேடிகம்,
5.வேத மதம்,
6.பூத வாதம்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லையே என்ற கேள்விதான் அது? ஏன் குறிக்கப்படவில்லை. சிந்திக்க வைக்கும் கேள்விதான்? இல்லையா!
அக்கேள்விக்கு விடை பிறகுப் பார்ப்போம்.



"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"!

முழுப்பாடல் விவரம்:

"பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுட்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளதோ" - நீலகேசி (661)

"பூர்ப்பம் - பூர்வ+ஆகமம்,
சுதக்கடல் = சுருதக் கடல் = ஆகமக்கடல்".

- அருக பகவான் கூறிய ஆகம நெறிகளை (ஒழுக்க நெறிகளை) மற்ற சமயத்தார் எடுத்தியம்பிக் கொண்டது போல் அவனுக்குறிய திருநாமங்களைக் கூட தத்தம் கடவுளருக்குச் சூட்டிக் கொண்டார்கள் என்பது தான் மேலே சொன்ன பாடலின் பொருள்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவு (தெய்வம்) உளதோ" என்ற அடியில் பொதிந்திருக்கும் இலக்கிய நையாண்டிக் குறிப்பிடத்தக்கது.


இந்த அடியைப் படிக்கும் போதெல்லாம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், வளையாபதி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற சமண நூற்களை, பின்னாளில், வலிந்து பொய்சமய சாயம் பூசியதையும், பிற்காலத்தில் சமணத் திருப்பதிகளை பிற சமயத் திருப்பதிகள் ஆக்கியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அம்மட்டோ, அருகன் திருப்பெயர்களைக்கூட பிற சமயத்தவர் உள்வாங்கி தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டதும் இங்கு நினைக்க வேண்டியிருக்கிறது.

காட்டாக, "திருக்குறளில்" கடவுள் வாழ்த்தில் வரும் "எண்குணன்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இப்பெயர் அருகனுக்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று. திருக்குறள் எழுந்தக் காலத்தில் அப்பெயர் அருக பகவானுக்கு வழங்கி வந்திருக்கிறது. சான்றாக, இளங்கோவடிகள் தாம் எழுதியச் சிலப்பதிகாரத்தில் - குமரவேல் முருகக் கடவுள், பிறவா யாக்கை பெரியோனான சிவபெருமான், வானளந்த திருமால் போன்ற பல கடவுளர்களை புகழ்ந்துப் பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால், வேறெந்த கடவுளுக்கும் "எண்குணன்" என்ற சொல்லைப் பயன் படுத்தாமல், அருகக் கடவுளுக்கு மட்டுமே பயன் படுத்துகிறார்.


மேலும், ஆரணி போளூர் வட்டத்தில் "திருமலை" என்ற மலை இருக்கிறது. இம்மலையில் 22ஆவது தீர்த்தங்கரரான "நேமிநாத சுவாமி"யின் 13அடி சிலையிருக்கிறது. இம்மலைக்கு"எண்குண இறைவன் குன்றம்" என்று பெயர்.
இம்மலையின் மற்ற பெயர்கள், கீழ்வரும் சுட்டியில் கண்டு கொள்க.

( http://www.treasurehouseofagathiyar.net/33000/33015.htm )
( http://www.treasurehouseofagathiyar.net/37100/37126.htm )

அவ்வண்ணமே "சூடாமணி நிகண்டு" அருகக் கடவுள் பெயர் தொகுதியில் "எண்குணன்"என்ற பெயரைச் சொல்கிறது. மற்ற சமயக் கடவுளர்க்கு அப்பெயர் சொல்லப்படவில்லை என்பது சிந்திதற்பாலது.

சூடாமணி நிகண்டில் கடவுள் பெயர் தொகுதியை கீழே வலைச்சுட்டியில் பார்க்கவும்.

( http://www.thamizham.net/super/nikandu01.htm )

ஆனால், பின்னாளில் "எண்குணன்" என்ற சொல்லை, மற்ற சமயத்தாரும் உள்வாங்கிக் கொண்டு தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டனர்.



இரா.பானுகுமார்,
சென்னை.